07/12/2024
"பூக்காலம்" என்ற அற்புதமான ஒரு திரைப்படத்தில் உலவிய திரு விஜயராகவன் அவர்களின் மற்றுமொரு தரமான நடிப்பில் வெளியாகி உள்ள படம் "கிஷ்கிந்தா காண்டம்"
இப்படி ஒரு படம் தமிழில் இதுவரை வெளியானது இல்லை!!! இனிமேல் வருமா தெரியவில்லை. இதுவரை இப்படிப்பட்ட படங்கள் வராததற்கு ரசிகர்களை காரணமாய் சொன்னவர்கள் தமிழ் இயக்குனர்கள், ஆனால் அதே ரசிகர்கள் இந்த கிஷ்கிந்தா காண்டத்தை எந்த அளவுக்கு ரசித்து சிலாகக்கிறார்கள் என்பது மிகத் தெளிவு. குறையை இயக்குனர்களிடம் வைத்துக் கொண்டு ரசிகர்களை இனிமேலாவது குறை சொல்லாமல் இருங்கள் தமிழ் இயக்குனர்களே...
அன்பு தயாரிப்பாளர்களே கோடிகளைக் கொட்டி ரத்தத்தையும் சதையையும் கஞ்சாவையும் காட்டி படம் எடுக்கும் எண்ணத்தை விடுங்கள்.ஜீவனுள்ள வாழ்க்கையிலிருந்து மனிதர்களின் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து சுவாரசியமான விஷயங்கள் கொட்டி கிடக்கின்றன. அவைகள் பக்கம் இனியாவது திரும்புங்கள். தமிழ் தயாரிப்பாளர்களே...
நீங்கள் பிரம்மாண்டத்தை பணத்தால் கொண்டு வர நினைக்கிறீர்கள், இவர்கள் கதையின் பிரம்மாண்டத்தை கொண்டு எளிமையாய் இந்தியாவெங்கும் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். விரைவில் உலகம் எங்கும் அவர்கள் சேர்ப்பார்கள். நீங்கள் இன்னும் புறப்படவே இல்லை...
சரி படத்திற்கு வருவோம் திரு விஜயராகவன் அற்புதமான மலையாள திரை உலகிற்கு கிடைத்த எதார்த்த நாயகன். இந்த மனிதருக்கு வயது இப்போது
70 ற்கும் மேல்...
நாடகக் குடும்பத்தில் இருந்து வந்த ஒரு அற்புத நடிகர்.நாம் இவரை மோகன்லால் படத்திலும் மம்மூட்டி படத்திலும் ஒரு இன்ஸ்பெக்டராகவோ, நண்பராகவோ நிறைய பார்த்திருக்கிறோம்.அவைகளை எல்லாம் உடைத்துக் கொண்டு வர அவருக்கு 70 வயதிற்கு மேல் ஆகி இருக்கிறது. இத்தனை வயதுக்கு அப்புறமும் சாதிக்க காரணம் அவருள் இருந்த ஒரு வேட்கையும் அவர் நம்பிய திரை உலகமும்...
இந்தப் படத்தின் கதாநாயகன் இவரே...
அரசாங்க பணியில் இருக்கும் ஒருவர் தன் மத்திம வயதை தாண்டிய பின்பு தான் சந்திக்கும் பிரச்சனையை சமுதாயத்திடம் மறைக்கப் போராடும் நபராய், அதற்கு அவர் கையாளக்கூடிய முறைகள், தன்னுடைய பலவீனத்தை மறைக்க, கோபத்தை ஆயுதமாய் கொண்டு தன் குடும்பத்தாரிடம் கூட வெளிப்படுத்தாமல் வாழப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு ஜீவனை பற்றிய கதை. எளிமையாய் உங்களுக்கு இந்த முன்னுரை தெரியலாம்! ஆனால் வாழ்ந்தவனுக்குத் தான் தெரியும், இது எத்தனை கடினம் என்று. தன் கோபத்தால் சமுதாயத்தில் இருந்து தன்னைத் தனித்துக் கொண்டு, குடும்பத்தாரிடம் கூட வினோதமாய் தென்பட்டு, தன் மனதின் குமுறல்களை வெளிப்படுத்த முடியாமல், வாழும் ஒரு அற்புத ஜீவனாய் விஜயராகவன் அவர்கள் வெளிப்படுத்தியுள்ள உணர்வு